ஓ.பி.எஸ் விசுவாசியை சீண்டும் ஆர்.பி.உதயகுமார்... ஜெயலலிதாவுக்கு இடம் கொடுத்தவருக்கே இந்த நிலைமையா..?
2011 தேர்தலுக்கு முன் மதுரையில் ஜெயலலிதா மாநாடு நடத்த விரும்பியபோது மு.க.அழகிரி ராஜ்ஜியம் அங்கு நடந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., மாணிக்கம் ஓ.பி.எஸ் ஆதரவாளர். 2011 தேர்தலுக்கு முன் மதுரையில் ஜெயலலிதா மாநாடு நடத்த விரும்பியபோது மு.க.அழகிரி ராஜ்ஜியம் அங்கு நடந்தது.
அப்போது மதுரையில் மாநாடு நடத்த யாரும் இடம் கொடுக்க முன்வரவில்லை. ஆனால், அழகிரியில் மிரட்டலையும் தாண்டி, மதுரை வண்டியூரை அடுத்த கருப்பாயூரணியில் தனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்த விட்டுக்கொடுத்தார். அந்த விசுவாசத்தின் அடியிப்படையில் தான் 2016 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் அழைத்துச் சென்று மாணிக்கத்துக்கு சோழவந்தான் சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தார் ஓ.பி.எஸ்.
அந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றார் மாணிக்கம். அடுத்து இரு கோஷ்டிகளாக அதிமுக பிரிந்தபோது முதல் ஆளாக ஓ.பி.எஸுக்கு தோல்கொடுத்து ஆதரவை காட்டினார் மாணிக்கம். அதற்கு பிரதிபலனாக அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினராக்கினார் ஓ.பி.எஸ்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தனித் தொகுதியில் மீண்டும் மாணிக்கத்திற்கு அதிமுக சார்பில் சீட் வாங்கிக் கொடுத்தார் ஓ.பிஎஸ். ஆனால் தோல்வியை தழுவினார் மாணிக்கம். ஆனால், இப்போது, மாணிக்கத்திற்கு இறங்கு முகம். இவருக்கும், முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இவருக்கான முக்கியத்துவத்தை கட்சியில் மெல்லக் குறைத்து விட்டனர். தேர்தல் காலத்தில் கூட மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு தலைமையிலிருந்து பணம் விநியோகம் செய்த நிலையில், இவரது தொகுதியை மட்டும் தலைமை கைவிட்டு விட்டது. இதுதொடர்பாக உதயகுமாரிடம் மாணிக்கம் சண்டை போட்டும் பலனில்லை.
தற்போது மாணிக்கம் ஆதரவாளர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு கட்சிப்பதவிகள் தரப்பட்டிருக்கிறது. அதாவது, வாடிப்பட்டி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளுக்கு ஒன்றிய பொறுப்பினை இவரது ஆதரவாளர்கள் இருவருக்கு தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது, மாணிக்கத்திற்கு பிடிக்காத, ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்களையே தேடிப்பிடித்து பதவிகள் தந்துள்ளது தலைமை. இதனால் ஆர்.பி.உதயகுமார் தன்னை கட்சியில் ஓரங்கட்டி வருவதாக கூற தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார் மாணிக்கம் என்கிறார்கள்.