ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளியுங்கள்….காளையுடன் களை கட்டிய ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம்…
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த போதிலும்,அதை உடைத்தெறிந்து அனுமதி வாங்கித் தந்த ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு காளையுடன் மதுசூதனன் வாக்கு சேகரித்தார்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் வரலாற்றில் இடம் பெற்றது.
இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் மத்திய அரசுடன் போராடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்தார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர், மதுசூதனன் ஜல்லிக்கட்டு காளையுடன் தொகுதிக்குட்பட்ட ஏ.இ.கோவில் தெரு, அம்மணி அம்மன் தோட்டம், வ.உ.சி.நகர், கார்ப்பரேஷன் காலனி, டி.எச். சாலை உள்பட பல இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மதுசூதனன்,ஜல்லிக்கட்டுக்கு முயற்சி எடுத்து அனுமதி பெற்று தந்த ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளராகிய என்னை நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறி, மின் கம்பம்’ சின்னத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஜல்லிக்கட்டு காளையுடன் மதுசூதனன் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.