அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்…அரசு வாகனங்களுக்கு அனுமதி இல்லை..ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் அதிரடி…
சென்னை ஆர்,கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், ஏற்கனவே அத்தொகுதியில் பணியாற்றிவரும் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 12–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நேற்று இரவு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஆர்.கே.நகர் தொகுதிக்கு கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொகுதியில் உள்ள சிறிய சந்துகள் வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்று கண்காணிக்க நுண் பார்வையாளர்களை நியமிக்கவும் தேர்தல் கமிஷன் தீர்மானித்து உள்ளது.
அத்துடன் ஆட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தொகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் பறக்கும் படையினரும் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்.
உதவி தேர்தல் அதிகாரிகள் மற்றும் அவருக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள், தொகுதியில் பணியில் இருக்கும் கூடுதல் போலீஸ் கமிஷனர் முதல் இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வரையிலான அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் முதல் செயற்பொறியாளர் அந்தஸ்து வரையிலான அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இருக்கிறது.
அரசு துறைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் அரசு வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் தொகுதிக்குள் வரும் வாகனங்களை எந்த தயக்கமும் இன்றி சோதனையிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.