ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் …. உஷாராகும் வருமானவரித்துறை !!!
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுகள் வழங்கப்படுவதை தடுக்க வருமான வரி புலனாய்வுத்துறை ரெடியாகி வருகிறது.
தமிழகத்தில், கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ரெய்டு நடந்தபோது, கரூரில், அ.தி.மு.க., பிரமுகர், அன்புநாதனின் வீட்டில், கணக்கில் வராத, 4.77 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அது, வாக்காளர்களுக்கு தருவதற்காக வைக்கப்பட்டு இருந்ததாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும் அன்புநாதன் வீட்டில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, சேலை, வேட்டிகளும் பறிமுதல் செய்யபட்டன. மேலும், கரன்சி நோட்டுகளை எண்ணும் இயந்திரங்களுடன், ஆம்புலன்ஸ் வேன்களும் சிக்கின.
அதே நேரத்தில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பழனிசாமி வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 1 கோடியே 98 லட்சம் ரூபாயை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆண்டு ஏபரல் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது வரும் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு, மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக, டிடிஎ தினகரன் அணி, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்லின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க வருமான வரித்துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து கண்காணிப்புப் பணிகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆர்.கே. தொகுதியிலும், அருகில் உள்ள பகுதி வங்கிகளிலும், தனியார் விற்பனையகங்களிலும், பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது..