எது எப்படியோ? பேசுனா சரி...! சசிகலாவிடம் புதுவிதமாக பேசிய டிடிவி...!
சிறையில் சசிகலா மவுனவிரதம் இருப்பதால் எழுத்து மூலம் பேசியதாகவும் சைகை மூலம் பேசியதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
இன்று பகல் 12 மணிக்கு டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து பேசினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து விட்டு எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார்.
இதையடுத்து முறைப்படி பதவி ஏற்ற பிறகு சசிகலாவை டிடிவி தினகரன் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.
பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை தினகரன் மீண்டும் இன்று சந்தித்து பேசி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினகரனின் தீவிர ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோரும் டிடிவி தினகரனுடன் பெங்களூரு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சிறையில் சசிகலா மவுனவிரதம் இருப்பதால் எழுத்து மூலம் பேசியதாகவும் சைகை மூலம் பேசியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் பேசிய எல்லா விஷயத்தையும் உங்களிடம் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.