right wing resort of hindu terror said kamal haasan
இந்துத்துவவாதிகளிடமும் தீவிரவாதம் பரவியிருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன், நீங்கள்(கமல்) பல முனைகளில் பயனுள்ள தலையீடுகள் செய்வதில் மகிழ்ச்சி. சீர்திருத்தத்திலும் மாற்றங்களிலும் தமிழ்நாட்டின் பல இயக்கங்களின் சரித்திரத்தை நீங்களும் உணர்ந்தவரே. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டையும் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சமூகங்கள் ஊக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் தமிழகத்தை எதிர்பார்த்திருக்கிறேன். எனினும் சமீபகாலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன் மூலம் திராவிடப் பண்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டிருந்தார்.
தமிழ் வார இதழ் ஒன்றிற்கு தொடர் எழுதிவரும் கமல், பினராயி விஜயனின் கேள்விக்கு பதில் எழுதியுள்ளார்.
அதில், ஒரு தலைமுறையே சாதிய வேறுபாடுகள் இல்லாமல் வளர்ந்துவருகிறது. அப்படி இருக்கையில், இத்தலைமுறையினர் உலவும் நவீனத்தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்க தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமா கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.
இத்தகைய இந்து வலதுசாரியினர், முன்பெல்லாம் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
எங்கே ஓர் இந்து தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் விடமுடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. இந்தத் தீவிரவாதம், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல.
வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நம்பிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும். மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கி தள்ளினாலும், சூழலும் இவ்வுலகின் ஈரிப்பு அதை முன்னோக்கித் தள்ளிவிடும். மீண்டும் தமிழகம் சமூகச் சீர்திருத்ததிற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு வார இதழில் பினராயி விஜயனுக்கு கமல் பதிலளித்துள்ளார்.
