எனக்கு தகுதி கிடையாது - இப்படியா ஜகா வாங்குவார் அமைச்சர் உதயக்குமார்...!
சபாநாயகரின் முடிவை விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது எனவும் எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது எனவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் சினங்கொண்ட வேங்கையாக ஆளுநரிடம் சென்று முதலமைச்சரை நீக்குங்கள் அல்லது எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என கடிதம் அளித்தனர்.
ஆனால் அது உட்கட்சி விவகாரம் என ஆளுநர் கூறியதால் காற்றில் விட்ட புஷ்வானம் போல் ஆனது.
இதையடுத்து எங்களுக்கு எதிராகவா கடிதம் கொடுக்கிறீர்கள் என கூறி சபாநாயகரை ஏவிவிட்டு எடப்பாடி நோட்டீஸ் அனுப்பினார்.
இதைப்பார்த்து கதிகலங்கி போன ஜக்கையன் எம்.எல்.ஏ நான் உங்ககிட்டையே வந்துடுறேன் என கூறி சபாநாயகரிடம் தஞ்சம் அடைந்தார்.
இதனால் அவரை தவிர்த்து மற்ற 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சபாநாயகரின் முடிவை விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது எனவும் எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தொடர்ந்து விமர்சித்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு கட்சியை வழிநடத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகிறோம் என்றும் அமைச்சரவைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா மட்டுமே என்றும் தெரிவித்தார்.