நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓய்வுபெற்ற நீதிபதிகள்: ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாக கடிதம்.
சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்
நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நீதிபதி ராமசுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில், ஒய்வு பெற்ற நீதிபதிகள் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.
நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், து. அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர். அதாவது நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் ஏற்கனவே தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக சூர்யா நீதிமன்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ராமசுப்ரமணியம் இந்த கடிதம் எழுதியுள்ளார். அதாவது உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யா தெரிவித்துள்ள கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத் தன்மையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும்,
சூர்யாவின் அக்கருத்து நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. என்றும், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என்றும், எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போலவே, நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும்,
4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் எனவும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.