ஜெ. நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் தற்கொலை….துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்….
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த அருண்ராஜ் என்ற காவலர் இன்று அதிகாலை 4.50 மணிக்கு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார் இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருண்ராஜ் மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் அருண் ராஜா தற்கொலை செய்து கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.