தனியார், அரசு பணிகளில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு...கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பு போராட்டம்....
தனியார், அரசு பணிகளில் கன்னட மக்களுக்கு பிரத்யேகமாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பெங்களூரு நகரில் பிரம்மாண்ட பேரணியும், போராட்டமும் நடத்தினர்.
பெங்களூருவில் நேஷனல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினரின் ஊர்வலம், மினரவா சர்க்கில், ஜே.சி. சாலை, கே.ஜி. சாலை, மைசூர் வங்கி சர்க்கில் வழியாகச் சென்று சுந்திரப்பூங்காவில் முடிந்தது. ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தால் நகரில் கடுமையாக போக்குவரத்துநெரிசல் நேற்று முன்தினம் இருந்தது.
தனியார், அரசு துறை, மத்திய அரசு பணிகளில் கன்னட மொழி பேசும் கன்னட மண்ணின் மைந்தர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், டாக்டர் சரோஜினி மகிஷி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரி பேரணியில் கோஷமிட்டனர்.
இதையடுத்து, கன்னட வீட்டு வசதித்துறை அமைச்சர் எம். கிருஷ்ணப்பாவிடம் போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்ைக மனுவை அளித்தனர்.
கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பின் தலைவர் டி.ஏ. நாராயண கவுடா கூறுகையில், “ நாட்டின் பல்வேறு மாநிலங்களி்ல இருந்து மக்கள் வேலைக்காக கர்நாடக மாநிலத்தில் குடியேறுவது அதிகரித்துவிட்டது. இதனால், இந்த மாநிலத்தில் பிறந்த மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது.ஆதலால், கன்னட மக்களின் நலனுக்காக சரோஜினி மகிஷி குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த அரசை வலியுறுத்தியுள்ளோம். எங்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் ’’ என்று எச்சரிதார்.