தனபால் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் !! கள்ளக்குறிச்சி பிரபுவின் அதிரடி பதில் !!
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரத்தில் 3 எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு கள்ளக்குறிச்சி பிரபு பதில் அளித்துள்ளார். அதில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சசீதிமன்றம் விதித்துள்ள தடை தனக்கும் பொருந்தும் என்றும், அதனால் அதற்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றும் பிரபு எம்எல்ஏ பதில் அனுப்பியுள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி, ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும், அரசு கொறடா சார்பில், சபாநாயகர் தனபாலிடம் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று, எம்.எல்.ஏ.,க்களிடமும் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டு கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனிடையே சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பிரபு எச்சநீதிமன்றம் செல்லாமல் விளக்கம் அளிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து சபாநாயகர் அளித்த, நோட்டீசுக்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள, சட்டசபை செயலகத்தில், தனது வழக்கறிஞர் மூலமாக, எம்.எல்.ஏ., பிரபு கடிதம் அளித்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றம் அளித்த தடை, தனக்கும் பொருந்தும் என்றும், ஒருவேளை, அந்த தடை தனக்கு பொருந்தாவிட்டால், சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விளக்கம் அளிப்பதற்கு, ஒரு வார கூடுதல் அவகாசம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பிரபுவுக்கும் பொருந்தும் என்பதால், சபாநாயகர், நோட்டீசுக்கு, அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என, சட்டசபை செயலகத்தில் இருந்து, அவருக்கு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.