ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் பதவியா? ஸ்டாலின் மீது பாயும் அறப்போர் இயக்கம்
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உண்மையை கண்டறியாமல் அவர்களுக்கு மீண்டும் உயர் பதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது. என அறப்போர் இயக்கம் தமிழக அரசை எச்சரித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உண்மையை கண்டறியாமல் அவர்களுக்கு மீண்டும் உயர் பதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது. என அறப்போர் இயக்கம் தமிழக அரசை எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை செட்டிங் செய்த புகாரில் சிக்கிய கார்த்திகேயன் IAS கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணம் புரளும் நெடுஞ்சாலைத்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சாலை பணிகளுக்கு டெண்டர்களை செட்டிங் செய்வதற்காக அவர் அந்த பணியில் நியமிக்கப்பட்டாரா என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் 2018ம் வருடம் இவரை குற்றம் சாட்டி எழுதிய முகநூல் பதிவையும் உங்களுக்கு சுட்டிக் காட்டினோம். நீங்களும் அந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்தீர்கள்.
அதன் விளைவாக பதவியில் நியமிக்கப்பட்ட இரண்டாவது நாளே அவர் அந்த பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை உயர்கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்துள்ளார்கள். அங்கேயும் டெண்டர்களை செட்டிங் செய்யும் பட்சத்தில் மக்கள் பணம் கொள்ளை போக வாய்ப்பிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உண்மையை கண்டறியாமல் அவர்களுக்கு மீண்டும் உயர் பதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த செயலை அறப்போர் இயக்கம் மக்களோடு இணைந்து தொடர்ந்து எதிர்க்கும்.