வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது. மத்திய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான வைகோ தெரிவித்தார்.

 நாடாளுமன்றம் கூட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி ஆதரவு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, இன்று நாடாளுமன்ற பூஜ்ஜிய நேரத்திலும் அதுதொடர்பாக பேசினார். “இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகிற வரையிலும், இந்தியாவின் ஆட்சி மொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு வழங்கினார். அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகிறோம்’ எனக் கூறியுள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.

இது ஒரு அடக்குமுறை ஆகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. மேலும், மத்திய அரசு அறிவிக்கிற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை; எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங்களுக்காக, மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடுகிறது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டிவந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகிறோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், மத்திய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலைவர், திமுக நிறுவனர், மறைந்த பேரறிஞர் அண்ணா இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார். அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது” என்று வைகோ பேசினார்.