டன் கணக்கில் குப்பைகளில் கொட்டப்படும் இளநீர் மட்டைகளை மறுசுழற்சி செய்ய ஆலை..!! சென்னை மாநகராட்சி புதிய முயற்சி
நாள்தோறும் 50 டன் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் தாவர கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைகள் அமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 டன் குப்பைகள் சேகரமாகிறது. 11 முதல் 15 மண்டலங்களில் வீடுகள்தோறும் சென்று தூய்மை பணிகள் மேற்கொண்டு, திடக்கழிவுகளை சேகரிப்பதற்கு 19,597 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சேகரமாகும் தாவர கழிவுகளை கையாளும் வகையில், நந்தனம், பெருங்குடி,கொடுங்கையூர், சேத்துப்பட்டு, மற்றும் சௌகார்பேட்டை பணிமனை ஆகிய ஐந்து இடங்களில் ஆலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலைகள் மூலம் தினந்தோறும் 500 டன் தாவர கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். சென்னை மாநகரில் நாள்தோறும் சேகரமாகும் இளநீர் மட்டைகளை மறுசுழற்சி செய்யும் வகையில், நந்தம்பாக்கம் குப்பை மாற்றும் வளாகத்தில் நாள்தோறும் 50 டன் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலை அமைக்கும் பணியினை ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் 22-2-2020 அன்று பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தாவரக் கழிவுகள் மற்றும் இளநீர் மட்டைகளையும் மறுசுழற்சி செய்யும் வகையில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தினந்தோறும் 100 டன் தாவர கழிவுகள் மற்றும் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலை அமைக்கும் பணிகளை ஆணையர் அவர்கள் 23-7-2009 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த பணிகள் செப்டம்பர் மாத இறுதியில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.