DMK: பிடிஆருக்கு வேட்டு வைத்த 'அந்த' விஷயம்...? கட்சி பதவி ராஜினாமாவின் பகீர் பின்னணி
டிகேஎஸ் இளங்கோவன் மீதான விமர்சனம், மநீமவில் இருந்து திமுகவுக்கு வந்த மகேந்திரனை கடுமையாக பேசியது உள்ளிட்ட காரணங்களே பிடிஆர் ஐடி விங் பதவிக்கு வேட்டு வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: டிகேஎஸ் இளங்கோவன் மீதான விமர்சனம், மநீமவில் இருந்து திமுகவுக்கு வந்த மகேந்திரனை கடுமையாக பேசியது உள்ளிட்ட காரணங்களே பிடிஆர் ஐடி விங் பதவிக்கு வேட்டு வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொந்த கட்சியாக இருந்தாலும் உள்அரசியல், காய் நகர்த்தல் என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான ஒன்று. அதன் விளைவாக கட்சியில் இருந்து கட்டம் கட்டப்படுவதும், மீண்டும் அங்கீகாரம் தரப்படுவதும் எல்லா கட்சிகளிலும் நடக்கக்கூடிய ஒன்று.
இதுபோன்ற சம்பவங்களுக்கு திமுகவும் விதிவிலக்கல்ல… நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமது கட்சி பதவியான ஐடி விங் மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்த பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
மிகச்சிறந்த படிப்பாளி, அறிவாளி, நிர்வாகத்திறன் கொண்டவர் என்று பெயர் பெற்றவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட போதே திமுகவில் மட்டுமல்ல, மாற்று கட்சியினரும் ஆச்சரியம் அடைந்தனர்.
பின்னர் அவர் சரியான சாய்ஸ்தான் என்று வம்பு பேசியவர்களும் பின்னர் கூறியது தனிக்கதை. இப்படி அமைச்சராக நியமிக்கப்பட்ட போது விமர்சனங்களை எதிர்கொண்ட பிடிஆர் இப்போது திமுகவின் ஐடி விங் மாநில செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தமது செயல்பாடுகளினாலும், தாம் வெளியிட்ட கருத்துகளினாலும் இப்போது ஐடி விங் மாநில செயலாளர் பதவியை இழந்திருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த மாற்றம் பல வாரங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது என்று கூறும் விவரம் அறிந்தவர்கள், இதன் பின்னணி பற்றி திமுக ஐடி விங் வட்டாரத்திலே பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
முக்கியமான துறைக்கு அமைச்சர் என்ற அழுத்தம் பிடிஆருக்கு அதிகம் என்றாலும், அவரது பதவி பறிப்புக்கு வேறு சில காரணங்களும் முன் வைக்கப்படுகின்றன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவரால் ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளின் எதிரொலியாக சமூக வலைதளங்களில் தலைமையின் உத்தரவுப்படி அரசியல் கருத்துகளை வெளியிடுவதை தவிர்த்து வந்தார் பிடிஆர்.
அதே மாதத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஆப்சென்ட் ஆனது, அப்போது பாஜக கூறிய விமர்சனங்களுக்கு அவர் தெரிவித்த பதிலடி என சர்ச்சைகளில் சிக்கினார் பிடிஆர். இந்த விவகாரத்தை ஊடகங்களில் கையாண்ட டிகேஎஸ் இளங்கோவனை பற்றி பிடிஆர் கூறிய கருத்துகள் தான் அவருக்கு விழுந்த முதல் சறுக்கல் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இளங்கோவன் பற்றி தாம் கூறிய கருத்துகளை பிடிஆர் பின்னர் நீக்கிவிட்டாலும் கட்சி தலைமையின் கவனத்துக்கு இந்த விவகாரம் ஜரூராக சென்று சேர்ந்தது. இதையடுத்து நேரிடையாக தலையிட்ட ஸ்டாலின் அரசியல் கருத்துகளை பிரஸ்மீட் போன்ற தருணங்களில் கூற தடா போட்டார்.
அப்போதும் அமைதியாக இருக்காத பிடிஆர், தமது கோபத்தை கட்சியில் புதியதாக சேர்ந்து, ஐடி விங் இணை செயலாளர் பதவியை பெற்ற மகேந்திரனிடம் காட்டியதாக புகார் எழுந்தது. அவரது நியமனம் குறித்து தம்மிடம் கருத்து கேட்கவில்லை என்பதால் ஏற்பட்ட ரியாக்ஷன் என்ற போதிலும், இதுவும் ஸ்டாலின் கவனத்துக்கு மகேந்திரனால் நேரிடையாக கொண்டு போகப்பட்டதாம்.
டிகேஎஸ் இளங்கோவன் பற்றிய கருத்து, மகேந்திரனை கடுமையாக பேசியது என புகார்கள் வரிசை கட்டி வந்துநிற்க, தலைமை மூலமாக ஐடி விங் பதவியில் இருந்து பிடிஆரை விலக சொல்லி கூறப்பட்டதாம். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளினால் நெருக்கடியாக இருந்த பிடிஆர் ஒரு கட்டத்தில் தமது ஐடி விங் மாநில செயலாளர் பதவி ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் அளித்துவிட்டார் என்கின்றனர் அனைத்தும் தெரிந்தவர்கள்.
அதே நேரத்தில் இணைய உலகில் ஆளுங்கட்சியாக மாறிவிட்ட திமுக மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட, பணிச்சுமையில் இருக்கும் பிடிஆருக்கு பதிலாக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் டிஆர்பி ராஜாவின் பெயர் டிக் செய்யப்பட்டதாம். இனி வரக்கூடிய கால கட்டங்களில் திமுகவின் மீதான விமர்சனங்களுக்கு ஐடி விங் புதிய எழுச்சியுடன் பதிலடி தரும் என்கின்றனர் கட்சிக்கு நெருக்கமானவர்கள்…!!