மக்கள் மத்தியில் எடப்பாடிக்கு எகிறும் செல்வாக்கு... ஸ்டாலின் தினகரன் மோதலின் பின்னணி இதுவா!
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில், ஸ்டாலின், தினகரன் ஆதரவாளர்கள் இடையே, கடும் மோதல் உருவானது எடப்பாடிக்கு மக்கள் மத்தியில் உயரும் செல்வாக்கை மறைக்கவே இந்த பிளான் என சொல்லப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களை தாக்கிய, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, திருவாரூர் தொகுதியில், நிவாரண பணிகள், இன்னும் முடியாத காரணத்தை காட்டி, அத்தொகுதியின் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்து விட்டது. தேர்தல் ரத்து அறிவிப்பு வரும் முன், திமுக சார்பில் பூண்டி கலைவாணன், தினகரன் கட்சியின் சார்பில் காமராஜ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிமுக உஷாராக வேட்பாளரை அறிவிக்கவில்லை.
ஆனால் திமுகவோ வேட்பாளரை அறிவித்துவிட்டு, தேர்தலை ரத்து செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர், டி.ராஜா, திருவாரூரைச் சேர்ந்த, மாரிமுத்து போன்றவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடவைத்ததாக தினகரன் விமர்சித்தார். திமுக நினைத்ததைப்போலவே தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து தினகரன் அளித்த பேட்டியில், திமுக வேட்பாளரை அறிவித்து விட்டு, தேர்தலுக்கு எதிராக, டி.ராஜா வாயிலாக வழக்கு தொடர்ந்து, இரட்டை வேடம் போடுகிறது; ஸ்டாலின், தேர்தலை சந்திக்க பயந்து விட்டார்' என்றார். அதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்டாலின், 'நான் பயந்து கொண்டிருப்பதாக, தினகரன் கூறுகிறார்.'தினகரன் மீது, சி.பி.ஐ., விசாரணை, அமலாக்கத் துறை வழக்கு, இரட்டை இலை சின்னத்திற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்குகள் இருக்கின்றன. அதற்காக, அவர் பயப்படலாம்' என்றார்.
இதையடுத்து, தி.மு.க.,வின், அதிகாரப் பூர்வ நாளிதழான முரசொலியில், '20, 20, 420' என்ற தலைப்பில், தினகரனை கடுமையாக சாடி, கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தினகரனின், 'டுவிட்டர்' பக்கத்தில், 'திருட்டு ரயில் ஏறி, சென்னை வந்த பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்' என, ஸ்டாலினை விமர்சித்து பதிவிடப் பட்டது.இதையடுத்து, ஸ்டாலின், தினகரன் ஆதரவாளர்கள் என, இரு தரப்பினரும், சமூக வலைதளங்களில், ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால், அர்ச்சனை செய்து வருகின்றனர்.
ஒன்பது கட்சி கூட்டணி பயில்வான்... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போவாரா?
ஸ்டாலின் ஆதரவாளர்கள் பதிவு விபரம்:
*ஜெயலலிதா இருக்கும் வரை பம்மியிருந்து, பன்னீர்செல்வத்திடம் மண்டியிட்டு, பழனிசாமி யிடம் கெஞ்சும் நபர், ஊழல் வழக்கில், சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், வார்டனுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டியவர். ஒரு கோடி ரூபாய்க்கு அப்பல்லோ இட்லியை, கட்சி காசில் சாப்பிட்டவர்.
மேலும், ஜெயலலிதா உயிரோடு உள்ளவரை, தினகரன் பெயரையே யாரும் உச்சரிப்பதில்லை. அதை மறந்து, சில கூலியாட்களை வைத்து, தற்போது, 'தினகரன் தினகரன்' என, கூவ வைக்கிறார் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறார்.
இந்த மோதல் விவகாரம் குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது; தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ள, சிறுபான்மையினர் ஓட்டுகள் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பான ஓட்டுகள், தி.மு.க., பக்கம் சாயாமல், தினகரன் பக்கம் சாய வாய்ப்புள்ளது என்ற பேச்சு, அரசியல் அரங்கில் எழுந்தது. எனவே, தினகரனை பற்றி எதிர்மறையாக விமர்சிப்பதன் வாயிலாக, சிறுபான்மையினர் மற்றும் மோடி எதிர்ப்பு ஓட்டுகளை, தி.மு.க.,வால் அறுவடை செய்ய முடியும் என, ஸ்டாலின் கருதுகிறார்.
மேலும், பொங்கல் பரிசு, ரூ1,000 ரூபாய், பிளாஸ்டிக் தடை சட்டத்தை, முதல்வர் பழனிசாமி செயல்படுத்தியதால், அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. எடப்பாடி பெரிய தலைவராக உருவாவதை தடுக்கும் வகையில், தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, அவரை விமர்சிக்க துவங்கி உள்ளார். அப்படி செய்தால், மக்கள் மத்தியில் எட்டப்படிக்கு உயரும் செல்வாக்கை மறக்கடிக்க முடியும் என ஸ்டாலின் & தினகரன் கேங் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், கிராமசபை கூட்டங்களில் பேசிய பேச்சாளர்கள், தினகரனை மட்டும் வசைபாடி உள்ளனர்.