நோக்கம் ஒன்றுதான்.. ஸ்டாலினுடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி.. அவையில் அதிர்வு.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அதிமுக நிச்சயம் துணை நிற்கும் என உறுதியளித்தார்
.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக எழுந்த விவாதத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளார்.16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வு ரத்து தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீட் தேர்வு இந்த ஆண்டு நடைபெறுமா இல்லையா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெற தொடர்ந்து போராடுவோம் என்றும், அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அதிமுக நிச்சயம் துணை நிற்கும் என உறுதியளித்தார். அப்போது அவையில் இது மிகுந்த வரவேற்பை பெற்றது. முன்னதாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்குபெற தமிழக பாஜக குரல் கொடுக்க தயாரா என எதிர் கேள்வி எழுப்பியதுடன், நீட் தேர்வு விலக்குபெற தமிழக அரசுக்கு பாஜக உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.