இனிமே வணிகர்களை தொட்டா அவன் கெட்டான்.. ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடையுங்கள்.. கொந்தளித்த விக்ரம ராஜா
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகரத்தை மூன்றாக பிரித்து தாம்பரம் மாநகரம், ஆவடி மாநகரம் உருவாக்கியுள்ள முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றார்.
வெளிநாட்டு பானங்களை தவிர்த்து பனையில் இருந்து வரும் பதநீரை பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக அரசை வலியுறுத்தி உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி குட்கா வியாபாரம் செய்பவர்களை தாங்கள் அடையாளம் காட்டி உள்ளதாகவும், அதன் மொத்த வியாபாரிகள் ஈரோடு, திருப்பத்தூர் போன்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை, காஞ்சிபுரம் மண்டல மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார்.
பள்ளிகள், கோயில்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் மார்கெட் போன்ற பகுதிகளில் இருந்து டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்பதாக அவர் கூறினார். மேலும் அக்கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி சேவைக் கட்டணம் இல்லாமல் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை வணிகர் நல வாரிய சீரமைத்து செயல்படுத்துவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகரத்தை மூன்றாக பிரித்து தாம்பரம் மாநகரம், ஆவடி மாநகரம் உருவாக்கியுள்ள முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றார். அதேபோல வணிகத்துறையில் இடைத்தரகராக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரவுடிகள் கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மீது உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
தடையை மீறி குட்கா வியாபாரம் செய்பவர்களை தாங்கள் அடையாளம் காட்டி இருப்பதாகவும், முக்கியமாக இதில் மொத்த வியாபாரம் செய்பவர்கள் ஈரோடு திருப்பத்தூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். தடைகளை மீறி குட்கா பொருட்கள் மொத்தமாக விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல வெளிநாட்டு பானங்களை தவிர்த்து பனையிலிருந்து வரக்கூடிய பதநீரை பயன்படுத்த தமிழ்நாடு அரசை வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பேரூராட்சி, நகராட்சி என தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு சீரான வாடகையை அமல்படுத்த வேண்டும் என்றும், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் மீதுள்ள வணிகர்களின் அச்ச உணர்வை போக்கும் விதத்தில் தேவையில்லாமல் தகராறு செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.