சாதி ரீதியாக திசை திருப்பி எடப்பாடியை தோற்கடிக்க துடிக்கும் ரவீந்திரன் துரைசாமி? கொதிக்கும் அதிமுக நிர்வாகிகள்
அதிமுக மீது பற்றுக்கொண்டுள்ள அந்த சமுதாய மக்களை ஒதுக்கி விட்டு அரசியல் செய்வது என்பது தன் கண்ணில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதற்கு சமம்.
"முக்குலத்தோரை எதிர்த்து அரசியல் செய்தால் மற்ற சமூகங்களின் வாக்குகளை பெறலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். அது அவருக்கு வெற்றியை தரும் என்பது உண்மை’’ என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி வெளிப்படையாக பேசி வருவது எடப்பாடியாருக்கே சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அரசியல் விமர்சகர் என்கிற பெயரில் ரஜினி அரசியலுக்கு வருவார்... அதனால் ஆதாயம் அடையலாம் எனக் கணக்குப்போட்டு அவரது துதி பாடி வந்தார் ரவீந்திரன் துரைசாமி. ரஜினி அரசியலுக்கு முழுக்குப்போடவே, போக்கிடமின்றி எடப்பாடியாரிடம் சரணாகதி அடைந்து இருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. தமது இருப்பிடத்தை வலுவாக இறுத்திக் கொள்ள எடப்பாடியாருக்கு இல்லாத ஊருக்கு வழிகாட்டி வருகிறார் என்கிற குற்றச்சாட்டு ரவீந்திரன் துரைசாமி மீது எழுந்துள்ளது.
அதிமுக என்ற பொது கட்சியை தனிப்பட்ட ஜாதி கட்சியாக சித்தரிக்கும் வேலையை பல காலமாக அரசியல் விமர்சகர் என்ற பெயரில் செய்து வருகிறார் ரவீந்திரன் துரைசாமி என்கிற குரல்கள் பலகாலமாக ஒலித்து வருகிறது. இந்நிலையில் ரவீந்திரன் துரைசாமி எடப்பாடி பழனிசாமிக்கு தவறான புள்ளி விவரங்களை தந்து அவரது அரசியலுக்கே முழுக்குப்போடத்துடிக்கும் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வருகிறார் என நாலாபுறமும் கருத்துக்கள் எதிரொலித்து வருகின்றன.
அதிமுகவின் பலமே முக்குலத்தோர், கவுண்டர் உள்ளிட்ட முக்கிய சமூகத்தினர்தான். ஆகையால் இரு சமுதாயத்தினருக்கும் சமமாக பொறுப்புகளை தந்து சிறப்பித்து வந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மற்ற சமுதாயத்தினரின் வாக்குகளை சொற்ப அளவிலேயே பெற்று வந்தது அதிமுக. ஜெயலிதாவின் மறைவிற்கு பிறகு முக்குலத்தோர் வாக்குகள் தமக்கு கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் இருந்து வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனை மோப்பம் பிடித்த அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி, எடப்பாடி பழனிசாமியிடம் முக்குலத்தோரை எதிர்த்து அரசியல் செய்தால் மற்ற சமூகங்களின் வாக்குகளை பெறலாம் என தவறான தகவலை அளித்துள்ளார். அது தொடர்பான கருத்துக் கணிப்பு என சில தகவல்களையும் எடப்பாடியாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எடப்பாடியார் இதனை நம்பினாரோ இல்லையோ, ரவீந்திரன் துரைசாமி தனது இந்தக் கருத்துகளை ஊடகங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
அவரது இந்த கருத்து தென் மண்டலத்தில் உள்ள அதிமுகவினரிடம் இது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து தென்மாவட்டத்தை சேர்ந்த தனித்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஒருவர், ‘’தேர்தல் நெருக்கத்தில் அரசியல் விமர்சகர் என்று ரவீந்திரன் துரைசாமி சொல்லும் கருத்துக்கள் எங்களின் வெற்றியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என அச்சம் ஏற்படுகிறது. சாதி ரீதியான அரசியல் கருத்துக்களை சொல்லி, முக்குலத்தோரை அதிமுகவில் இருந்து பிரிக்கும் வேலையை இவர் போன்றவர்கள் நிறுத்தவேண்டும். தேர்தல் களத்தில் போராடும் எங்களுக்குத் தான் அதன் மகத்துவம் தெரியும்.
தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் முக்குலத்தோர் பரவி வாழ்ந்து வருகிறார்கள். கொங்கு மண்டலத்தில் கூட தென்மாவட்டங்களில் இருந்து குடியேறிவர்கள் அதிகம். அதிமுக மீது பற்றுக்கொண்டுள்ள அந்த சமுதாய மக்களை ஒதுக்கி விட்டு அரசியல் செய்வது என்பது தன் கண்ணில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதற்கு சமம். தென்மாவட்டங்களில் எம்மை போன்ற தனித்தொகுதி வேட்பாளர்களுக்கு எங்கள் சமுதாய மக்கள் வாக்களிப்பது மிகக்குறைவு. அதிமுக சார்பில் யாரை நிறுத்தினாலும் முக்குலத்தோர் வாக்குகள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள். அது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க, சசிகலாவை மனதில் வைத்து ரவீந்திரன் துரைசாமி போன்றோர் கொடுக்கும் குருட்டுத்தனமான ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி கேட்டு செயல்படுவாரேயானால் எங்கப்பன் என் குருதிக்குள் இல்லை என்கிற கதையாகி விடும்’’ என்கிறார் அந்த தனித் தொகுதி எம்.எல்.ஏ.
இது இப்படி இருக்க ரவீந்திரன் துரைசாமிக்கு சமூக வலைதளங்களில் செம எதிர்ப்புகள் கிளம்பி வருகின்ற. அந்த வசவுகளில் சில...