Due to the shortage of ration ops
ரேஷனில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். முறையாக பொருட்கள் வழங்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக திமுக சார்பில் போராட்டமும் நேற்று நடந்தது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உணவு துறை அமைச்சர் காமராஜ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ரேஷன் பொருட்கள் தட்டுபாடு ஏற்படும் என்பது, சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரியும். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுபற்றி தெரிவித்தேன். ஆனால், அவர் எதையும் காதில் வாங்காமல் இருந்துவிட்டார்.

பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கடந்த 2ம் தேதி விடப்பட்டது. இதற்கான அறிக்கையையும் வெளியிட்டோம். 3ம் தேதி பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஆனால், திமுகவினர் 7 ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், 13ம் தேதி (நேற்று) ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறினர். அதன்படி ஆர்ப்பாட்டமும் நடந்தது.
நாங்கள் டெண்டர் விட்டு, கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த பின் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இன்னும் 2 நாட்களில் நாங்கள் பொருட்களை வினியோகம் செய்வோம்.

அப்போது, திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் பொருட்கள் கிடைத்தது என்ற பெயர் எடுக்க வேண்டும். அதற்காகவே இந்த போராட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.
அதேபோல் நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை விடுத்தார். அதில், ஜெயலலிதாவின் ஆட்சியில் அவலம் ஏற்படக் கூடாது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்ய அரசு மெத்தனம் காட்ட கூடாது என கூறினார்.
அவர் முதலமைச்சராக இருந்தபோதே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அதை நான் பலமுறை அவரிடம் தெரிவித்தும், கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டார். ஆனால், இன்று அரசியல் லாபத்துக்காக அறிக்கை வெளியிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
