ஸ்மார்ட் கார்டு இருந்தாதான் இனி ரேஷன் பொருட்கள் …. சீக்கிரம் ஸ்மார்ட் கார்டு வாங்குங்க !!
வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது
.போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.
குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு வடிவில் அமைக்க ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் அட்டையிலிருந்து இணைக்க வசதியாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் சிறிய ஸ்கேனிங் கருவி வழங்கப்பட்டு ஆதார் விவரங்கள் குடும்ப அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டன.
இதையடுத்து பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன.
பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார்.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்களை வாங்க ஸ்மார்ட் அட்டைகள் கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 94 லட்சத்து 47 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில், 1 கோடியே 93 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் எஞ்சிய 1 லட்சத்து 47 ஆயிரம் பேரும் விரைவில் ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..
இவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் விதமாக மார்ச் 1ம் தேதிக்குள் ஆவணங்களை வழங்கி ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் 1ம் தேதிக்குப் பின்னர் ஸ்மார்ட் கார்டுகள் இருந்தால் மட்டுமே நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.