ramesh jairam warning to congress
பிரதமர் மோடி-அமித்ஷா கூட்டணியின் சவால்களால் காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘‘காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தல் நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.
ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அதன் இருப்புக்கே விடுக்கப்பட்ட சவாலாகும் நெருக்கடியாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி உண்மையில் ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.
நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்., வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள்.

எனவே நாமும் நம் அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையுடன் இல்லாவிட்டால் நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.
காங்கிரஸ் கட்சி, இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.
2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன்.
நான் ராகுல் காந்தி 2015-ல் பொறுப்பேற்பார் என்று கூறினேன் அது நடக்கவில்லை,2016-லும் எதிர்பார்த்தேன் நடக்கவில்லை.
2018-ம் ஆண்டில் முக்கிய மாநிலங்களிலும், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால், 2017-ம் ஆண்டுக்கு முன்பாகவே ராகுல் கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்பார் என நம்புகிறேன்.

2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும்.
நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.
நெருக்கடி நிலைக்குப்பின் ரேபரேலியில் தோல்வியை தழுவிய இந்திரா காந்தி, 40 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் சிக்மகளூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புத்துயிர் பெற்றார்.
அதேபோல் அடுத்த ஆண்டில் கர்நாடகாவில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் என நம்புகிறேன்
நிதிஷ்குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
