ராமஜெயம் கொலை வழக்கு.. அமைச்சர் நேரு அளித்த பதில் இதுதான்..!
திருச்சி கலையரங்கத்தில் தொலைநோக்கு திட்ட ஆவணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி கலையரங்கத்தில் தொலைநோக்கு திட்ட ஆவணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்.. விசாரணை வளையத்தில் 2 பேர்.!
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ''முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திருச்சியில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், 7 துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவோம் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் எந்தெந்த துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். அதன்படி, அந்தந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக ஏழை எளியோருக்கு தேவையான குடி தண்ணீர் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது ஒரு குறிப்பு போன்று தயாரிக்கப்பட்டு இதன் படி தான் நடைமுறைப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இன்று டிஜிபி விசாரணை நடைபெற உள்ளதே என்ற கேள்விக்கு, ''போலீஸ் விசாரணையில் உள்ளது. அதை பற்றி கருத்து தெரிவிக்க முடியாது'' என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.