உச்ச நீதிமன்றத்திற்கே உத்தரவு போட்ட ராமதாஸ்..! எங்கள் எதிர்பார்ப்பு நீதி தானே தவிர ஆறுதல் அல்ல
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் இருந்து தமிழக மக்கள் நீதியைத்தான் எதிர்பார்க்கின்றனரே தவிர ஆறுதலை அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை(நேற்று) ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பிரச்னையில் தமிழகத்தின் நலன்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் தமிழகத்திற்கான நீர் கண்டிப்பாக கிடைக்கும் எனவும், அதனால் தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் அக்கறை உண்மை என்றால், அது வரவேற்கத்தக்கதுதான். அதிலும் தலைமை நீதிபதி அமர்வில் வேறு வழக்குக்காக ஆஜராகிய வழக்கறிஞரிடம் இவ்வாறு கூறியிருப்பது, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிகழ்வுகளை உச்சநீதிமன்றம் கவனித்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஆனால், இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் மத்திய அரசே மதிக்கவில்லை என்பதுதான் தமிழகத்தில் போராட்டம் வெடிப்பதற்கான முக்கிய காரணம்.
வரும் 9-ஆம் தேதி, காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்க நீதிபதிகள் ஆணையிட வேண்டும். அதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. உச்சநீதிமன்றத்திடம் இருந்து தமிழகம் எதிர்பார்ப்பது நீதியைத்தானே தவிர ஆறுதலை அல்ல என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.