கன்சிராம் போன்ற உயர்ந்த தலைவர்கள் வரிசையில் அமர வேண்டியவர் ராமதாஸ்.. திருமாவளவன் ஆதங்கம்.
அதன் பின்னர் சமுதாய அரசியல், சங்பரிவார் அமைப்பு விரித்த வலையில் சிக்கி சங்பரிவார்கள் அமைப்பின் செயல் திட்டத்தை காப்பியடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இந்திய அளவில் கன்சிராம் போன்ற உயர்ந்த தலைவர்கள் வரிசையில் அமர வேண்டியவர் பாமக நிறுவனர் ராமதாஸ் என்றும், ஆனால் சங்பரிவார அமைப்புகளுடன் கை கோர்த்ததன் விளைவாக அவரது அரசியல் வெரும் 60 சீட்டுகளுக்குள் சுருங்கிக் கிடக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பித்த ராமதாஸ் ஆரம்பகட்டத்தில் பெரியார், மார்க்சிய கொள்கைகளில் ஈடுபாடு உடையவராக அறியப்பட்டார். அதன்பிறகு சங்பரிவார் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார். ஒருகட்டத்தில் தலித் மக்களை எதிர்க்கும் அரசியலில் அவர் விழுந்து விட்டார் என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
1980களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக தான் நடத்திய வீரியமிக்க போராட்டத்தின் மூலம் தமிழகத்தின் சமூகநீதி காவலராக அறியப்பட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். தற்போது அவருக்கு நேரெதிர் அரசியலில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவளால் தமிழ்க்குடிதாங்கி என புகழப்பட்டவர் ராமதாஸ். கல்வி, பொருளாதாரம் வேலை வாய்ப்பில் வன்னிய சமுதாயம் பின்தங்கி கிடப்பதை கண்ட அவர், வன்னிய சமுதாய அமைப்புகளை ஒன்று திரட்டி 1980இல் ஜூலை 20 ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டத்தைத் தொடங்கினார். அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20% இட ஒதுக்கீடு மத்தியில் 2% தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை 18 லிருந்து 22 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஒரு வாரம் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்து நடத்தியவர் அவர். அப்போது 21 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தனர். ஆனாலும் போராட்டம் வீரியம் குன்றாது நடந்தது. பதறிப்போன அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக வன்னியர் சமுதாயம் உட்பட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பட்டியலில் இணைத்து 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. தொடர்ந்து சமூக நீதி, மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்த ராமதாஸ் 1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்தார். நானும் எனது குடும்பத்தாரும் எந்தப் பதவிக்கும் வரமாட்டோம் சட்டமன்றத்திற்குள் அல்லது நாடாளுமன்றத்திற்குள் என் கால் செருப்பு கூட செல்லாது. இது என் இறுதி மூச்சு வரையிலும் இருக்கும். நான் மறைந்த பின்னரும் இது அமலில் இருக்கும் என உறுதி பூண்டார். "ராமதாஸ் "என்ற தன் பெயரை தமிழ் படுத்தும் வகையில் "இராமதாசு" என மாற்றிக் கொண்டார். அவர் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் நிறுவும் திட்டத்தை அறிவித்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என குரல் எழுப்பினார் அவர். 1998-ல் கும்பகோணம் அருகில் உள்ள குடிதாங்கி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு தன் தோளில் சுமந்து சென்றார். அதனால் ராமதாசை தமிழ் குடிதாங்கி என்று திருமாவளவன் அழைத்தார்.
சமூகநீதி அரசியலிலும், சாதி ஒழிப்பு அரசியலிலும் மிகத் தீவிரமாக களம் கண்ட ராமதாஸ் காலப்போக்கில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது அச்சமூக மக்கள் மத்தியில் அவர் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. கூட்டணிக்காக கொள்கையை இழந்தவர் ராமதாஸ் என்ற விமர்சனத்திற்கு ஆளானார். இப்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். இது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கட்சி ஆரம்பித்து 35 ஆண்டுகளை கடந்துவிட்டது ஆனாலும் கூட பாமக ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது என்னுடைய தவறா? அல்லது தொண்டர்கள் ஆகிய உங்களுடைய தவறா? ஏன் நாம் கட்சி நடத்த வேண்டும்? கலைத்து விடலாம் என்று ஒருவித அழற்ச்சி, இயலாமை அவரது பேச்சில் தென்படத் தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னர் பெரிய அளவில் எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த பாமகா, தற்போது ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி நடிகர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. அரசியல் செய்வதற்கு வேறு வழியில்லாமல் பாமக சினிமா நடிகர்களை வம்புக்கு இழுக்கிறது என்ற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது. அவர் எடுக்கும் அரசியல் முடிவாக இருந்தாலும் சரி அல்லது போராட்ட களமாக இருந்தாலும் சரி அனைத்தும் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாஜக நடத்த வன்முறையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டன. அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், சங்பரிவார்களின் எதிரிகள் பட்டியலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இடதுசாரிகள் என பட்டியலில் உள்ளனர். திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்து- இஸ்லாமியர் இடையே மோதல் போக்கு அரங்கேறி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்காக குறிவைத்து திரிபுராவில் இந்த வன்முறை நடந்துள்ளது என பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறித்தும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். மக்களிடம் இயல்பாகவே உள்ள சாதிய மத உணர்வை தங்களது தொலைநோக்கு திட்டத்திற்காக பயன்படுத்தும் எண்ணம் சங்பரிவார் அமைப்புகளிடம் உள்ளது. பாமக தலைவர் ராமதாஸ் ஆரம்ப காலகட்டத்தில் பெரியார் மற்றும் மார்க்சிய கொள்கைகளில் ஈடுபாடு உடையவராக காணப்பட்டார்.
அதன் பின்னர் சமுதாய அரசியல், சங்பரிவார் அமைப்பு விரித்த வலையில் சிக்கி சங்பரிவார்கள் அமைப்பின் செயல் திட்டத்தை காப்பியடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அதன் விளைவாக தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார். ஆரம்பத்தில் அவர் நடத்திய சமூகநீதி போராட்ட களங்களில் அவர் காலூன்றி தடமாறாமல் நின்றிருந்தால், அகில இந்திய அளவிலும் கன்சிராம் போன்ற உயர்ந்த தலைவர் வரிசை அவர் அமர வேண்டியவர். இப்போது 60 சீட்டுகளுக்கு அவர் சுருங்கி கிடக்கிறார் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீது தற்போதைய அரசியல் சூழ்லில் எத்தனையோ விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அன்று அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டம், அவர் முன்னெடுத்த சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் காலத்தால் அதன் கோலத்தால் என்றும் அழிக்க முடியாதவை யாராலும் மறுக்க முடியாதவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பதையே திருமாவளவனின் இந்த குரல் பதிவு செய்துள்ளது.