எங்க அய்யாவுக்கு நிம்மதி போச்சுங்க.. தலைமைச் செயலகத்துக்கு ஓடி வந்து முதல்வரிடம் கதறிய கோ.க மணி.
உண்மையான சமூக நீதி என்பது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பின்னரே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு என்ற அவர், ஆனால் மத்திய அரசு அதை மேற்கொள்ளவில்லை என்றார்.
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அதிமுக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது, பின்னர் அதற்கான அரசாணையை திமுக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அவ்விட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி நிலையங்களில் வன்னிய சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது பாமக உள்ளிட்ட பல்வேறு வன்னிய அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது, இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி .வேல்முருகன் தலைமை செயலகத்தில் இன்று முதல்வரை நேரில் சந்தித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பல மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். தற்போது மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்பாராதவிதமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
கடந்த அதிமுக அரசு ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் அவசரகதியில் சட்டம் நிறைவேற்றிய நிலையில் அந்த சட்டத்தால் ஒருவர்கூட பயன் அடைய முடியாத நிலையே இருந்தது. ஆனால் பின்னர் அது திமுக அரசால் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வன்னியர்களுக்கு கிடைத்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள மனமில்லாதவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்றார். ஆனால் மாணவர்கள் பாதிக்காத வண்ணம் உடனே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வழியில் சமூக நீதியை பாதுகாக்க முதலமைச்சர் ஸ்டாலின் முயல வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தேவைப்பட்டால் இந்த வழக்கு சம்பந்தமாக அரசுக்கும் டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களுக்கும் தேவையான ஆவணங்களையும், கோப்புகளையும் தருவதற்கு தங்களது வழக்கறிஞர் அணையை தயாராக உள்ளது என்றார்.
உண்மையான சமூக நீதி என்பது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பின்னரே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு என்ற அவர், ஆனால் மத்திய அரசு அதை மேற்கொள்ளவில்லை என்றார். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக வன்னியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே மத்திய மாநில அரசுகள் விரைந்து போர்க்கால அடிப்படையில் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டு வாசலுக்கு வெளியே உள்ள மக்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்றார். மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட வம்பர் 1 ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சரை பாமக தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே மணி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த நீண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்ததாக கூறினார் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மருத்துவ ராமதாசுக்கும் வன்னியருக்கும் நீதி மன்ற தீர்ப்பு பேரிடியாக விழுந்துள்ளதாக கூறினார்.
இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பயன் அடைந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற அவர், மீண்டும் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க தமிழக முதலமைச்சர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார். தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார். அதேநேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். தீர்ப்பின் எதிரொலியாக பேருந்து உள்ளிட்ட பொதுச் சொத்துக்க தாக்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறு ஒருபோதும் நடைபெற கூடாது என்பதுதான் பாமகவின் நிலை என்றார்.