காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி. யார்.? ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி மட்டுமல்ல இன்னொருவரும் போட்டியில்!
உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘ஒரு குடும்பம் ஒரு சீட்டு’ என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே சிவகங்கை எம்.பி.யாக இருக்கும் சூழலில் ப. சிதம்பரத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள்ளது.
தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் 3 பேர் போட்டியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளின் காலம் முடிவடைகிறது. திமுகவில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஸ்குமார்; அதிமுகவில் நவனீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமனியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 10 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தில் இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாமகவுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்த எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 எம்.பி.க்களும் அதிமுக கூட்டணிக்கு 2 எம்.பி.க்களும் கிடைப்பது உறுதி. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார். திமுக சார்பில் ராஜேஸ்குமார், தஞ்சை கல்யாணம், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஓரிடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் பதவிக் காலம் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. எனவே, மாநிலங்களவை எம்.பி. பதவியை மீண்டும் பெறும் வண்ணம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சிதம்பரம் சந்தித்து பேசினார்.
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஓரிடத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அந்த இடத்தில் ப.சிதம்பரம் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘ஒரு குடும்பம் ஒரு சீட்டு’ என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே சிவகங்கை எம்.பி.யாக இருக்கும் சூழலில் ப. சிதம்பரத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை ப.சிதம்பரத்துக்கு பொருந்தாது என்றாலும் காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பது சஸ்பென்ஸாக இருக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரிக்கு எம்.பி. பதவியைக் கொடுக்கும் எண்ணத்தில் மேலிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தலைவர் பதவியை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு, எம்.பி. பதவி அழகிரிக்கு வழங்கப்படலாம் என்று சத்யமூர்த்தி பவனில் பேசப்படுகிறது. இவர்கள் இருவரைத் தாண்டி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுவும் போட்டியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2019இல் ராகுல் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொறுப்பாளராக கே.வி. தங்கபாலு செயல்பட்டார். எனவே, கே.வி. தங்கபாலுவுக்கு எம்.பி. பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸில் இப்படிப் பேசப்பட்டாலும் கட்சியின் தலைமை என்ன முடிவை எடுக்கும் என்பது மேலிடத்துக்கு மட்டுமே வெளிச்சம்.