மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த எம்.பி பதவி யாருக்கு என அனைத்து கட்சிகளும் போட்டிபோட தொடங்கியுள்ளது.
மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த எம்.பி பதவி யாருக்கு என அனைத்து கட்சிகளும் போட்டிபோட தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதை அடுத்து காலியிடத்தை நிறுப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தைப் பொருத்து ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் திமுகவுக்கு 3 எம்பி பதவிகள், அதிமுகவுக்கு இரு எம்பி பதவிகள் கிடைக்கும். 6 ஆவதாக உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவிடம் கேட்டு பெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் திமுகவில் 3 பதவிகள் யாருக்கு என்ற போட்டி இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதே போல் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் போட்டியிடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த சீட்டை பெற தற்போது எம்பியாக உள்ள ஒருவர் இப்போதே காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் உள்ள இரு பதவிகள் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இரு பதவிகளுக்கு கோகுல இந்திரா, பொன்னையன், செம்மலை உள்ளிட்டோர் போட்டியிட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அவர்களோடு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுக்குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் இறுதி முடிவு. எல்லோரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் சரி, என்ன பணி கொடுத்தாலும் சரி, அதை மேற்கொண்டு சிறப்பாக செய்வதுதான் எல்லோருடைய முனைப்பும். எனவே இது கட்சி எடுக்கின்ற முடிவு என்று தெரிவித்தார். ஜெயலலிதா மறவுக்கு பின் செய்தியாளர்களை அதிகம் சந்தித்த அமைச்சர் என்றால் அது ஜெயக்குமார் தான். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ராயபுரத்தில் தோல்வியடைந்தார். எனவே இந்த முறை இவருக்கு எம்பி பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
