ராஜ்யசபா எம்.பி., பதவி... திமுகவுடன் மல்லுக்கட்டும் காங்கிரஸ்..!
தி.மு.க.,வில், மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிகளை கைப்பற்றுவதற்கு, அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தி.மு.க.,வில், மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிகளை கைப்பற்றுவதற்கு, அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமதுஜான், சட்டசபை தேர்தலுக்கு முன் மரணம் அடைந்தார். கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றதால், தங்களின் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால், தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா எம்.பி., இடங்கள் காலியாக உள்ளன. இந்த மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில், தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க., - எம்.பி.,க்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர். இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், எம்.பி., பதவியை பிடிக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள், இளைஞர் அணியினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி., பதவியை பெற, தி.மு.க., மூத்த நிர்வாகிகளான கம்பம் செல்வேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொங்கலுார் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது. இளைஞர் அணி தரப்பில் இருந்து புதுக்கோட்டை அப்துல்லா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி மகன் முத்து, அண்ணாநகர் கார்த்திக் போன்றவர்கள், எம்.பி., பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பிலும், ஒரு எம்.பி., பதவி கேட்கப்படுகிறது. ஆனால், அக்கட்சிக்கு எம்.பி., பதவி வழங்க தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. இதனால், மூன்று பதவிகளையும் தி.மு.க.,வே எடுத்துக்கொள்ளும் என, தெரிகிறது.