13 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான இலாகா இதுவரை ஒதுக்கப்படவில்லை. பாஜவை சேர்ந்த 2 அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்களை கேட்டு பாஜ தலைமை பிடிவாதமாக உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஜெட் வேகத்தில் அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் 100வது நாளை நெருங்கும். ஆனால் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று, அதனைதொடர்ந்து 50 நாளுக்கு பிறகு அமைச்சரவை பொறுப்பு ஏற்றது. ஆனால் 13 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான இலாகா இதுவரை ஒதுக்கப்படவில்லை. பாஜவை சேர்ந்த 2 அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்களை கேட்டு பாஜ தலைமை பிடிவாதமாக உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ரங்கசாமி, அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் அவரது வழக்கமான பாணியான அமைதியை கடைபிடித்து வருகிறார். இது பாஜவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 ஏற்கனவே சபாநாயகர் பதவியை என்ஆர் காங்கிரசிடமிருந்து பாஜ பறித்துவிட்டது. தற்போது மத்திய அமைச்சரான எல்.முருகனுக்காக ராஜ்யசபா எம்பி பதவியை பாஜவுக்கு ஒதுக்க வலியுறுத்தி வருகிறது. முக்கிய இலாகாவையும் பாஜ கேட்பது என்ஆர் காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டுமென ரங்கசாமியிடம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவரும் இதை நிறைவேற்றிக் கொடுக்கும் திட்டத்தில் இருந்தார். தற்போது பாஜவோ, நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை திடீரென நியமனம் செய்ததுபோன்று புதுச்சேரியில் உள்ள முக்கிய வாரிய தலைவர் பதவிகளையும் பாஜவை சேர்ந்தவர்களுக்கு நிரப்ப முடிவு செய்து உள்ளது. இதனால் ரங்கசாமிக்கு அடுத்த அதிர்ச்சியை பாஜ கொடுக்க காத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.