25 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களவைத் தேர்தல்…. இன்று நடைபெறுகிறது…
உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உட்பட 10 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 58 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 33 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 25 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
58 மாநிலங்கவை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதி உள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதில் 31 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறும். அதன் பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்படும்.
உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பாஜக வேட்பாளர்கள் 8 இடத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
அந்த மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் புதிய கூட்டணி அமைத்து உள்ளது. இதனால் அதிருப்தியில் உள்ள இரு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேலும் ஒரு இடத்தை பெற வாய்ப்பு உள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
மேற்கு வங்காளத்தில் 5 இடங்களுக்கு 6 பேரும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 5 பேரும், தெலுங்கானாவில் 3 இடங்களுக்கு 4 பேரும், ஜார்கண்டில் 2 இடங்களுக்கு 3 பேரும், சத்தீஸ்காரில் ஒரு இடத்துக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர்.