Rajinikanth effigy in Coimbatore for his speech against Tamils

போர் வரும் போது பார்ப்போம் என்று அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் பேசிய ஈரம் காய்வதற்குள் கோவையில் அவருக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

அரசியலுக்கு இதே வருகிறேன், அதே வருகிறேன் என்று தனது ரசிகர்களுக்கு போக்கு காட்டி வந்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்திற்கான தொடக்கப்புள்ளியை ராகவேந்திர திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியுள்ளார். 

ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பின் மைக் பிடித்த நடிகர் ரஜினிகாந்தில் பேச்சில் அரசியல் குறித்து அத்தனை அறச்சீற்றம். தமிழக அரசை மறைமுகமாகச் சாடிய அவர் மு.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்டவர்களை புகழ்ந்து பேசினார். 

ரஜினியின் இந்தப் பேச்சு பட்டி தொட்டி முழுக்க ஜொலி ஜொலிக்க, கோவையில் மட்டும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ரஜினி தமிழர்களை இழிவாகப் பேசியதாகக் கூறிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது உருவ பொம்யை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

அரசியல் என்னும் பெருங்கடலில் இன்னும் காலைக் கூட நனைக்காத ரஜினிக்கு கோவையில் இருந்து முதல் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது..... ரஜினியின் கோட்டை கனவுக்கு கொங்கு மண்டலம் முற்றுப்புள்ளி வைக்குமா?