பணம், பெயர், புகழுக்கு ஆசைப்படாதவர் கமல்!! ரஜினி புகழாரம்
பணம், பெயர், புகழுக்கு ஆசைப்படாத கமல், மக்கள் நலப்பணிகளை செய்வதற்காக அரசியலுக்கு வருகிறார். அவரது அரசியல் பயணம் வெற்றியடைய ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருதுருவங்களான ரஜினியும் கமலும் அரசியலிலும் நேருக்கு நேர் மோத தயாராகிவிட்டனர். இருவருமே அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்ட நிலையில், வரும் 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமேஸ்வரத்திலிருந்து பயணத்தை தொடங்குகிறார் கமல்.
அதற்கு முன்னதாக பலரை கமல் சந்தித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோரை சந்தித்து பேசினார்.
இன்று நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து கமல் பேசினார். அரசியல் பயணம் குறித்து ரஜினியிடம் தெரிவித்ததாகவும் இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல; நட்பு ரீதியான சந்திப்புதான் எனவும் கமல் விளக்கமளித்தார்.
அதற்கு பின்னர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பணம், பெயர், புகழுக்கு ஆசைப்படாத கமல், மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருகிறார். அவரது அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் இறைவனிடம் வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, சினிமாவில் என்னுடைய பாணியும் கமலின் பாணியும் வேறு. அதேபோலத்தான் அரசியலிலும்.. என்னுடைய பாணி வேறாக இருக்கும். கமலின் பாணி வேறாக இருக்கும். ஆனால் இலக்கு ஒன்றுதான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் இலக்கு என ரஜினி தெரிவித்தார்.