"அரசியல் சிஷ்டத்தை பற்றி பேச ரஜினிக்கு தகுதி இல்லை" - தன் பங்கிற்கு வாயை திறந்த ஜெ. தீபா...
திரை துறையில் சிஷ்டம் சரியில்லாதபோது அரசியல் சிஷ்டம் பற்றி பேச ரஜினிக்கு தகுதி இல்லை என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது:
இந்தியாவிலேயே முதல் முறையாக நடிகர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றதிற்கும் சென்றவர் அண்ணா அவர்களால் இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட மறைந்த S.S.ராஜேந்திரன் ஆவார்.
அதேபோல், இந்தியாவிலேயே நடிகர் நாடாண்டது நம்முடைய புரட்சித்தலைவர்ஆவார். நடிகை அரியணை ஏறியது நம்முடைய புரட்சித்தலைவி ஆவார்.
இவர்களை மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்தார்கள். காரணம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகி அரசியலை கற்றுகொண்டதால்தான்.
அவர்கள் உருவாக்கிய இயக்கம் இன்றும் ஆலமரம் போல் ஆயிரம் ஆண்டுகளானாலும் தொடர்ந்து பட்டுப்போகமல் பயணிக்க பாதை வகுத்து தந்துள்ளார்கள்.
தற்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருவாரா? வரமாட்டாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்திய ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்கு சட்டத்தில் தடையில்லை, ஆனால் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எம்ஜிஆர், அம்மா, ஆகியோர்களைத் தவிர தமிழ் மண்ணில் வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மிகப் பெரும்பாண்மையான மக்களிடையே அதிருப்தி தான் நிலவுகிறது.
காரணம் அவ்வப்போது புனிதமான அரசியல் துறையை ஊறுகாய் போன்று அவர் பயன்படுத்த நினைப்பதை மக்கள் ரசிக்கவில்லை.
முதலில் அரசியலுக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், என்று கூறுவதற்கே அவரிடம் தெளிவு இல்லை.
1996ல் ரஜினி எடுத்த தவறான முடிவு என்ன என்பதை வெளிப்படையாக கூறாதது ஏன்? இவரால் அரசியல் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்பதை அறிவிக்க தயாரா? தயங்குவது ஏன்?
திமுக, தமாக கூட்டணியைத் தான் ரஜினி கடந்த 1996ல் ஆதரித்தார் என்பது குறிப்பாகும். இந்நிலையில் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று எந்த அளவுகோல் அடிப்படையில் ரஜினிகாந்த் பேசினார்?
அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்களால் புறக்கணிப்பட்ட ஒரு செயல் இழந்த தலைவரை ரஜினிகாந்த் பாராட்டுவது உள்நோக்கம் என்ன? மற்றும் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று இவர் பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா?
தமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றறுக்கொள்ள முடியல்லை.
இவ்வாறு தீபா அறிக்கையில் கூறியுள்ளார்.