rajinikanth close the door for kamalahassan

அன்று! தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி- எம்.ஜி.ஆர் என்பது இரு எதிரெதிர் துருவங்கள்தான். ஆனால் தி.மு.க.வின் உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர். பல ஆண்டுகள் கருணாநிதியுடன் நகமும், சதையுமாக இருந்தார். கட்சியில் கணக்கு கேட்ட பிந்தான் சிக்கல் எழுந்தது. அரசியல் எதிரியானார்கள். 
அதேபோல் தமிழக சினிமாவில் ரஜினி - கமல் இருவரும் எதிரெதிர் துருவங்களில்லை. இருவருக்குள்ளும் மிகப்பெரிய நட்பும், புரிந்துணர்வும் இருந்தது. ரசிகர்கள் முட்டிக் கொண்டாலும் கூட என்றுமே இவர்களிருவரும் கருத்தளவில் கூட மோதியதில்லை. 

ஆனால் யார் கண் பட்டதோ! இந்த சுமார் அரை நூற்றாண்டு கால நட்புக்கு இடையில் அரசியல் சிறு விரிசைலை கிளப்பியது. இருவரும் சமகாலத்தில் அரசியலில் காலெடுத்து வைக்க இருக்கின்றனர். சுமார் இருபத்தைந்து வருடங்களாக அரசியலுக்குள் நுழைவது போல் படம் காட்டிக் கொண்டிருந்த ரஜினி கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ‘ஆம் நான் அரசியலில் இறங்குகிறேன்’ என்று அறிவித்துவிட்டார். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்குள்தான் அரசியல் பேச துவங்கினார் கமல், ஆனால் இன்னும் சில நாட்களில் கட்சியின் பெயரையே அறிவிக்கிறார். 

சினிமாவில் இல்லாத போட்டி இவர்களுக்குள் அரசியலில் முளைத்திருக்கிறது! என்று விமர்சகர்கள் வெளிப்படையாகவே வாதிடுகின்றனர். 
ரஜினியின் அரசியல் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்க, கமலின் அரசியலோ பகுத்தறிவு சார்ந்ததாக இருக்கிறது. 

வரும் 21-ம் தேதியன்று தன் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்த இருக்கும் கமல், அதைத்தொட்டு டி.என்.சேஷன், நல்லகண்ணு உள்ளிட முக்கிய சித்தாந்த மற்றும் ஆளுமைவாதிகளை சந்தித்து வந்தார். 
அதேவேளையில் ‘அரசியலில் நானும், ரஜினியும் கூட்டு சேர்வோமா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்’ என்றும் கமல் கணீர் கருத்துக்களை சொல்லிக் கொண்டு வந்தார். 

இந்நிலையில், இன்று பிற்பகலில் திடீரென ரஜினியின் போயஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார் கமல். 
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இந்த நிகழ்வு.
போயஸ் வீட்டில் தன்னை சந்தித்துவிட்டு காரில் கிளம்பிய கமலை, வீட்டின் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் ரஜினி. கமல் காரிலேறியமர்ந்ததும் கதவை சாத்திவிட்டார் ரஜினி. பின் அங்கேயே நின்று கொண்டிருந்தவர், உள்ளேயிருந்து கமல் ‘கிளம்புகிறேன்’ என்று சொன்னதும், ‘தேங்ஸ்’ என்று சொல்லி வணங்கி கதவை சாத்திவிட்டார். 

வெளியே வந்த கமல், மீடியாவிடம் ‘ரஜினியை நட்பு ரீதியில் சந்திக்க வந்தேன்.’ என்றார், ரஜினியோ ‘அவருடைய எல்லா பயணங்களும் வெற்றியடைய வாழ்த்தினேன். சினிமாவிலேயே என் பாணி வேறு, அவரது பாணி வேறு.’ என்றார். 
ரஜினியின் வார்த்தைகளின் மூலம், அரசியலில் இருவருக்கும் இடையில் போட்டி நிலைதான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது! என்கிறார்கள் விமர்சகர்கள்.