தமிழகத்தில் அரசியல் மாற்றமே நமது நோக்கம்! ரஜினிகாந்த்
தமிழக அரசியலில் மாற்றத்தைக் ஏற்படுத்துவோம் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய ஆண்டவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி பேசியுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
அவ்வப்போது அரசியல் குறித்து தனது கருத்துக்களையும் கூறி வருகிறார். விரைவில் அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று கட்சியின் பெயர், கொடி அறிமுக செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆன்மீக பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆன்மீக தலங்களில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேசி வந்தார்.
இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். ஆன்மீக பயணம் மனதுக்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். பிற மாநிலத்தவர்கள் வியந்து பார்க்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.
ஒழுக்கம், கட்டுப்பாடுடன் பணியாற்றினால் எதையும் சாதித்து விடலாம் என்று கூறிய ரஜினி, மற்ற மாநிலத்தவர்கள் பொறமைப்படும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றார். ஆண்டவன் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளார்; அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று மன்றத்தினர் யாரும் பொறாமையில் செயல்படக் கூடாது என்றும் தேவையற்ற சண்டைகளைத் தவிருங்கள் என்றும் ரஜினி கூறினார்.