"முரசொலி பவள விழாவில் ரஜினி கண்டிப்பாக கலந்து கொள்வார்" - திமுக அறிவிப்பு!!
முரசொலி பவளவிழா அழைப்பிதழிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் இல்லாத நிலையில் விழாவில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என செய்திகள் வெளியான நிலையில், அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.
தி.மு.க. நாளேடான முரசொலி பத்திரிகை பவள விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் அரசியலின் போக்கை மாற்றுபவர்களாக கருதப்படும் கமல், ரஜினி என இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கமல்ஹாசன் விழா மேடையில் பேசுகிறார். அழைப்பிதழில் உரையாற்றுவோர் பெயர் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் ரஜினி பெயர் இடம் பெறவில்லை.
எனவே ரஜினிக்கு அழைப்பு இல்லை. அவர் பங்கேற்க மாட்டார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் ரஜினியும் இந்த விழாவில் பங்கேற்பதாக திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் பேசும்போது பவள விழாவில் ரஜினி பேச,விரும்பவில்லை என்றும், பார்வையாளராக வருவதாகவும் கூறி விட்டார்.
இதுபற்றி அவர் மு.க. ஸ்டாலினிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டார். எனவேதான் அழைப்பிதழில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்றும் ஆனால் ரஜினியும் நிச்சயமாக கலந்து கொள்கிறார் என்று தெரிவித்தனர்.