தேசத்துரோக வழக்கில் ரஜினியை கைது செய்யணும்...! சரத்குமார் ஆவேசம்
பிரச்சனையைச் சரி செய்வதை விட்டுவிட்டு, மக்களைக் கட்டுப்படுத்த முயலக் கூடாது என்றும் ரஜினியின் பேச்சு மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அவர் மீது தேசதுரோக வழக்கு பதிய வேண்டும் என்றும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். அப்போது பேசிய ரஜினிகாந்த், மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறினார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டதாகவும், சமூக விரோதிகளை ஜெயலலிதா ஆட்சியின்போது எப்படி ஒடுக்கப்பட்டு வைத்திருந்தார்களோ அதேபோன்று இந்த அரசும் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரஜினியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், நடிகர் ரஜினிகாந்த்தை தேசத்துசூராக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் போராட்டக்களமாக மாறி சுடுகாடாக மாறிவிடும் என்கிறார் ரஜினி. அப்படி என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று கூறுகிறாரா? அல்லது மக்கள் போராட உரிமை இல்லை என்று ரஜினி கூறுகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு போராட உரிமை இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, போராட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரச்சனையைச் சரி செய்வதை விட்டுவிட்டு மக்களைக் கட்டுப்படுத்த முயலக் கூடாது. ரஜினியின் பேச்சு மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது உடனடியாக தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் என்றும் நடிகர் சரத்குமார் கூறினார்.
இதன் பின்னர் நடிகர் சரத்குமார், தூததுக்குடிக்கு சென்ற நிலையில் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தி பேசினார்.