கண்ணா.. இன்னும் 10 நிமிசம்... ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக்!
நடிகர் ரஜினி காந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அடுத்து பத்து நிமிடங்களில் அறிவிப்பதாகக் கூறினார். இன்று காலை இந்த வருடத்தில் தனது ரசிகர் சந்திப்பின் கடைசி நாள் என்பதால் தனது அரசியல் முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
இதனால் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை முதல் ரசிகர்களும் ஊடகத்தினரும் பெருமளவில் கூடியிருந்தனர். எனவே அவரது முடிவை முன்னதாகவே அறிய, நடிகர் ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் செய்தியாளர்கள் அவர் காரில் ஏறும் முன்னர் கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினியோ, கண்ணா.. இன்னும் பத்து நிமிசம்... என்று சொல்லிவிட்டு, காரில் ஏறிப் பறந்தார்.
இன்று ஞாயிறு என்பதால், தனது வழக்கமான ஆன்மிக வழிபாடுகளைவிட கூடுதல் நேரம் எடுத்து, வழிபாடுகளை முடித்து விட்டு, சற்று கால தாமதமாகத்தான் வீட்டை விட்டுக் கிளம்பினார்.
இந்தியாவே ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்நோக்கி உள்ளது என்று ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இருப்பினும், ரசிகர்கள் சிலர், ரஜினியின் இன்றைய அறிவிப்பு கட்சியாக இருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் அவர் அறிவிப்பு பேரவை அல்லது நற்பணிமன்றம் அறிவிக்க வாய்ப்பு அதிகம் என்றே கூறினர். மேலும், அவர் என்ன முடிவு அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்று கூறினர்.