"உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது”
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தைப் படித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு, ‘உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளர்.
ராகுல் வெளியிட்ட உங்களில் ஒருவன்

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தன்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்து, ‘உங்களில் ஒருவன்’ என்ற நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியீடு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதல் பாகத்தை கடந்த பிப்ரவரி மாதம் 28 அன்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். அதை தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகிழ்ச்சியில் ஸ்டாலின்

இந்த நூல் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியிலும் அதிகளவில் திமுகவினரால் விரும்பி வாங்கப்பட்டன. இ ந் நிலையில் இந்தப் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்து விரும்பிப் படித்து, அந்தப் புத்தகத்தைப் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு போன் போட்டு நடிகர் பாராட்டி பேசியிருக்கிறார். ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை ரஜினி பாராட்டி பேசியது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
