பதில் சொல்ல தெரியாத ரஜினி; அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை கமல் - வெளுத்து வாங்கும் சுப.வீ...
கோயம்புத்தூர்
எந்த சிக்கலான கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாமல் ரஜினி இமயமலை புறப்பட்டார். கமல் நான் இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை என்கிறார் என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சுட்டிக் காட்டினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர்திடலில் நகர தி.மு.க.சார்பில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடுவிளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, மாவட்ட தொண்டரணிதுணை அமைப்பாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், "தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணமான ஐந்து மாதத்தில் மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்தவர்.
தமிழ்நாட்டில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நீட் தேர்வு, இந்தி திணிப்பு, ரத யாத்திரை என எந்த பிரச்சனை, பாதிப்பு என்றாலும் முதல்குரல் கொடுப்பவர் ஸ்டாலின்தான்.
சட்ட மன்ற உறுப்பினர், மேயர், உள்ளாச்சி துறை அமைச்சர், துணை முதல்வர் பதவி, அரசியலில் நெழிவு, சுழிவு கற்றவர் ஸ்டாலின்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வருவதுபோல் இன்று பலபேர் முதலமைச்சர் பதவி கனவில் உலா வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கூறலாம்.
அரசியலில் கால் பதிக்க வந்துள்ள இவர்களுக்கு இலட்சியம், கொள்கை கிடையாது. எந்த சிக்கலான கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாமல் ரஜினி இமயமலை புறப்பட்டார். கமல் நான் இடதுசாரி இல்லை, வலதுசாரியும் இல்லை மையத்தில் இருப்பதாக கூறுகிறார்.
டி.டி.வி.தினகரன் தான் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு தமிழக வாக்காளர்களை கவர்ந்துவிடலாம் என்று கனவு கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை பாதுகாக்க மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டனர்.
மக்களால்தேர்வு செய்யப்பட்ட பொன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணை அமைச்சர் என்ற டம்மி பதவி. மக்களால் தேர்வு செய்யப்படாத நிர்மலா சீத்தாராமனுக்கு இராணுவ அமைச்சர் பதவி. இதுவேதனைக்கு உரியது.
ரத யாத்திரையை தமிழக அரசு தமிழகத்தில் அனுமதித்திருக்க கூடாது" என்று அவர் பேசினார்.