பா.ஜ.க-வோடு இணைந்தால் ரஜினுக்கு நிச்சயம் வெற்றிதான் - இந்து முன்னணி மாநிலத் தலைவர் காமெடி...
திண்டுக்கல்
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து பா.ஜ.க-வோடு இணைந்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இந்து முன்னணி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் விபூசணன் முன்னிலை வகித்தார்.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியது:
"நடிகர் கமல்ஹாசன் இந்துக்களின் பண்பாடு, கலாச்சாரத்துக்கு எதிரானவர். ஆனால், மக்களோடு ஒத்துப்போனால்தான் வெற்றி பெற முடியும். இதுவரை அதற்கு தகுந்தாற்போல யாரும் இல்லாததால்தான், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், அந்த இரு கட்சிகள் என்ன சொன்னார்களோ? அதே ரீதியில் கமலின் செயல்பாடு இருக்கிறது. அவருடைய சொந்த வாழ்க்கையில் சரியாக நடந்து கொள்ள முடியாதவர், மக்களிடம் எப்படி சரியாக இருப்பார்?
தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு சரியில்லை. சென்னையில் ரௌடிகள் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஒரு அமைப்பினர் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். உளவுத்துறை விழிப்போடு இருக்க வேண்டும்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, பா.ஜ.க-வோடு இணைந்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியும். ஏனென்றால், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு ரஜினிகாந்த் செயல்பட வேண்டும்" என்று அவர் பேசினார்.