ராஜேந்திர பாலாஜிக்கு விரைவில் ரிட்டயர்மென்ட்... காங்கிரஸ் எம்.பி. சாபம்..!
தமிழக அரசியலில் வடிவேலு இல்லாத இடத்தை பெற்றுள்ள அமைச்சருக்கு சிவகாசி மக்கள் பாடம் புகட்டி ரிட்டயர்மென்ட் கொடுத்து விரைவில் வீட்டில் உட்கார வைப்பார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியை பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் பொதுமக்கள் எல்லோருக்கும் நம்பிக்கை வரும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிதானம் இழந்து பேசிவருகிறார். தமிழக அரசியலில் வடிவேலு இல்லாத இடத்தை பெற்றுள்ள அமைச்சருக்கு சிவகாசி மக்கள் பாடம் புகட்டி ரிட்டயர்மென்ட் கொடுத்து விரைவில் வீட்டில் உட்கார வைப்பார்கள். ராஜேந்திர பாலாஜியை வீட்டுக்கு அனுப்பும் பணியை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபடுவார்கள்.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து பாஜகவினர் செய்த பிரசாரம்தான் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் மதசார்பற்ற கூட்டணியைச் சார்ந்தவர்கள்தான். கடந்த 1996 தேர்தல், அடுத்த கட்டங்களில் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து பயணித்திருக்கிறார்கள். அதனால்தான் ரஜினி மன்றத்திலிருந்து விலகியவர்கள், மதசார்பற்ற கட்சியில் இணைகிறார்கள். இது மிகவும் நம்பிக்கையாக உள்ளது” என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.