சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி முடிவு... ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு சிக்கல்..?
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு புகார் தொடர்பான வழக்கில் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்து உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு புகார் தொடர்பான வழக்கில் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்து உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் முந்தைய விசாரணையின் போது, புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவரது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் சார்பில் விசாரணை குறித்த 6-ஆவது அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாகவும், அமைச்சரிடமும் விசாரிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை அறிக்கை மாநில கண்காணிப்பு கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜேந்திர பாலாஜின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரலாம் என்கிறார்கள்.