'மெர்சல்' காட்சிகளை நீக்க கோருவது அநீதியானது: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில்ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்கக் கோருவது அநீதியானது என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலருமான அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள், காட்சிகள் இடம் இருப்பதால் தமிழக பாஜக தலைவர்கள் அக்காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டுமென எதிர்ப்பு தெரிவித்தநிலையில் மெர்சலுக்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைகள் முதல், முதலமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பாஜகவிற்கு எதிராக ஒருமித்த குரலெழுப்பியுள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமிழிலேயே ட்விட்டை வெளியிட்டு போட்டுள்ளார்.
இதனால் மெர்சல் திரைப்பட விவகாரம் தேசிய அளவிலான பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி மெர்சல் திரைப்படத்தில் கருத்துகளை முன்வைக்க விஜய்க்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்துக்கு பாஜக புதிய வரையறையை கொடுக்கிறது. எது சரி.. எது தவறு என்பதை பாஜக தீர்மானிக்க முயற்சிக்கிறது என ட்வீட் போட்டுள்ளார்.
BJP to decide what is wrong or right for us:a new definition of free speech.Vijay in Mersal has every right to criticise GST,Digital India.
— Kapil Sibal (@KapilSibal) October 21, 2017
இதேபோல் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், "மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான காட்சிகளை நீக்கச் சொல்வது அநீதியானது" என குற்றம் சாட்டியுள்ளார்.