திமுகவைக் குறிவைத்து ரெய்டு விடும் பறக்கும் படை ! தூத்துக்குடி அனிதா ராதா கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை !!
திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டைத் தொடர்ந்து தற்போது கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியில் வலது கரம் போல் செயல்பட்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார். கடந்த 10 நாட்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் திமுகவை முடக்கும் விதமாக வேலூரில் உள்ள அக்கட்சியின் பொருளாளார் துரை முருகன் வீட்டில் வருமானவரித்துறையும், பறக்கும் படையும் சோதனை நடத்தி 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்எ திமுக தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும்படை இன்று இரவு திடீரென ரெய்டு நடத்தி வருகிறது.
திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவரும் சூழலில் திமுக முக்கிய நிர்வாகிகளை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் ரெய்டு நடந்தது. இன்றும் அவரது கல்லூரியில் ரெய்டு நடந்தது.
திமுக இதுபோன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாது என ஸ்டாலின் பேசியிருந்த நிலையில் இன்று திமுகவின் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை இல்லத்தில் தேர்தல் பறக்கும்படையினர் மாலை 6-30 மணிமுதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊரான தண்டபத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் மாலை 6-30 மணி முதல் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.