நீங்கள் எல்லாம் போலி காந்தி கும்பல்..! பா.ஜ.க தாக்கு..!
நாடாளுமன்றம் காந்தி சிலை முன் இன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து மக்களை ஏமாற்றும் 'போலி காந்திகள்' முயற்சி மேற்கொண்டுள்ளதாக கர்நாடகா பா.ஜ.க கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குளிர்கால கூட்டத்தொடரில் முதல் கூட்டத்தில் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு எதிர்வித்தனர். மக்களவையிலும் மாநிலங்களைவிலும் எதிர்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இவை நிறைவேற்றப்பட்டன.
மேலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதில் விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். விவாதம் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேறியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்து இருந்தார். ‛‛வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்பே கூறியிருந்தோம். தற்போது அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அஞ்சுகிறது. இந்த விவகாரத்தில் ஆதரவாக குரல் கொடுத்த நாட்டு மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை என்று குறிப்பிட்டிருந்தார்.
எம்.பி ராகுல் காந்தியின் கருத்திற்கு, தற்போது கர்நாடக பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது. ‛‛விவசாய மசோதாக்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நீக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுலின் சொர்க்கபுரியில் வாழும் போலி காந்திகள் பலர் காந்தி சிலை முன் நின்று போராட்டம் நடத்துகின்றனர்,'' என்று கர்நாடகா பா.ஜ.க சமூக வலைதளப் பக்கத்தில் போராட்டத்தை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளது.