அன்புக்குரிய மோடி அவர்களே.. எவ்வளவு கருப்பு பணத்தை மீட்டு வந்தீங்க?
சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ள நீங்கள் அங்கிருந்து கருப்புப் பணத்தை கொண்டு வந்துவிட்டீர்களா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மோடி புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் வங்கியிலிருந்து கருப்புப்பணத்தை மீட்டு வந்துவிட்டீர்களா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அன்புக்குரிய மோடி அவர்களே, சுவிட்சர்லாந்தில் இருந்து தாய் நாடு திரும்பியுள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த சூழ்நிலையில், கருப்புப் பணம் தொடர்பாக உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சுவிட்சர்லாந்தில் இருந்து நீங்கள் திரும்பி வந்த விமானத்தில் எவ்வளவு கருப்புப் பணத்தை அந்நாட்டில் இருந்து மீட்டு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இந்திய இளைஞர்கள் விரும்புகிறார்கள் என ராகுல் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஒரு சதவீதம் பேரிடம்தான் நாட்டில் உள்ள 73 சதவீத சொத்துகள் குவிந்துள்ளன என்று ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் இது தொடர்பாக நீங்கள் பேசாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்காக பாடுபடுவோம் என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டு, இப்போது பெரும் தொழிலதிபர்களின் நலனுக்காக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள் என்றும் மோடி மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.