சிக்கலில் ராதாரவி - முதல் பேச்சே சர்ச்சையானது
ராதாரவி திமுகவில் இணைந்த பின்னர் பேசிய முதல் பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை கேவலமாக சித்தரித்து பேசியதால் ராதாரவி சிக்கலில் சிக்கியுள்ளார்.
காலம் எவ்வளவோ மாறிக்கொண்டிருக்கிறது. வேகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் என்ன படித்தாலும், சமூகத்தில், பொதுவாழ்வில் பெரிய இடத்தில் இருந்தாலும் பல மனிதர்களின் மனம் மட்டும் இன்னும் ஆயிரம் ஆண்டுகால பழைய சாக்கடையாகவே இருக்கிறது என்பற்கு உதாரணம் நடிகர் ராதாரவியின் பேச்சு உதாரணமாக அமைந்துள்ளது.
நடிகர் ராதாரவி, சமீபத்தில் மீண்டும் திமுகவில் இணைந்தார். கடந்த மார்ச் 1 ஸ்டாலின் பிறந்த நாளில் திமுக மேடையில் தனது முதல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராதாரவி சிறப்புக்குழந்தைகளை கேலியும், கிண்டலுமாக அறுவெறுக்கத்த வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சை கேட்டு , மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை பெரியவர்களும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவரது பேச்சின் இறுதியில் ராமதாஸ், வைகோவை கிண்டல் செய்யத்தான் மாற்றுத்திறனாளி குழந்தைகள் போல் கிண்டல் செய்து நடித்து காட்டியதாக கூற அது வலைதளங்களில் வைரலாக பரவ தற்போது பலரது கண்டனத்துக்கு ராதாரவி ஆளாகியுள்ளார்.
உங்கள் அரசியல் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் நிலைபாட்டில் யாரையும் திட்டுங்கள். ஆனால் தினம் தினம் போராடிக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளை ஏன் இழிவு படுத்துகிறீர்கள்.
எல்லோரையும் போல சிறப்புக்குழந்தையின் பெற்றோரும் கனவுகளுடனே இருக்கின்றனர். அவர்கள் கனவு சிதைக்கப்படும் போது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. உணரமட்டுமே முடியும். மனிதத்தன்மையுடையவரால் மட்டுமே அவர்களின் வலியை உணர்ந்துகொள்ளமுடியும்.
இனி காலம் முழுவதும் அக்குழந்தையை தாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். தன் வேலையைக்கூட அக்குழந்தையினால் பார்த்துக்கொள்ளவே முடியாது என்பதை அறியும்போது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. உணரமட்டுமே முடியும். மனிதத்தன்மையுடையவரால் மட்டுமே அவர்களின் வலியை உணர்ந்துகொள்ளமுடியும்.
அப்புறம், உறவினர், சுற்றத்தார் ஏற்படுத்தும் சொல்லடிகள். தினம் தினம் குமுறிக்குமுறியே கழியும் இரவுகள் இவர்களுடையது. இந்த வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. உணரமட்டுமே முடியும். மனிதத்தன்மையுடையவரால் மட்டுமே அவர்களின் வலியை உணர்ந்துகொள்ளமுடியும்.
கொஞ்சம் வளர்ந்ததும், பள்ளி, பேருந்து, ரயில் பயணங்களில் சக மனிதர்கள் ஏற்படுத்தும் காயம். அந்த வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. உணரமட்டுமே முடியும். மனிதத்தன்மையுடையவரால் மட்டுமே அவர்களின் வலியை உணர்ந்துகொள்ளமுடியும்.
”பல சந்தர்ப்பங்களில் குடும்பத்துடன் விஷமருந்திவிடலாமா என்று யோசித்திருக்கிறோம்” என்று என்னிடம் சொன்னவர்கள் ஏராளம். இவ்வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. உணரமட்டுமே முடியும். மனிதத்தன்மையுடையவரால் மட்டுமே அவர்களின் வலியை உணர்ந்துகொள்ளமுடியும்.
உடல்சார்ந்த குறைகளுடையவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக நேரடியாக போராடவோ, உரிமைகுறித்தோ பேசிவிடமுடியும். அறிவுசார் குறைப்பாட்டின் கீழ் வரும் குழந்தைகளின் உரிமைக்கு அவர்தம் பெற்றோரும், சில நல்ல மனிதர்களுமே வக்கீலாக வந்து துணை நிற்க முடியும். உங்களைப்போன்றோரின் செய்கைக்கு அவர்கள் துணை நிற்பார்கள் என்றே நம்புகிறேன்.
ஊனமுற்றவர் என்ற சொல்லையே ’மாற்றுத்திறனாளி’ என்று மாற்றிய ஒரு தலைவனின் கட்சியில் இப்படியான மனிதர்கள்.
ராதாரவியின் இப்பேச்சுக்கு திமுக தலைமை அவரைக் கண்டித்து அறிக்கைவிடவேண்டும். ராதாரவியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் வருத்தமுடன் பதிவு செய்துள்ளார். இதே போன்று வலைதளங்கள் ,ஃபேஸ்புக் , வாட்ஸ் அப்புகளில் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.