சீனாவிலிருந்து 15 ஆம் தேதி வருகிறது ரேபிட் கிட் ..!! அதுவரை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு இருக்கிறது..!!
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா சமூகப்பரவலை அடைந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகிவிடும் ,
கொரோனா வைரசை வேகமாக கண்டறிய உதவும் ராபிட் டெஸ்ட் கிட் எனப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி வரும் 15ஆம் தேதி அன்றுதான் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகிறது , 9 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இந்தியா அதிக அளவில் பரிசோதனைகள் செய்தால் மட்டுமே எவ்வளவு பேருக்கு தொற்று உள்ளது என்பது தெரியவரும் ஆனால் இந்தியா குறைந்த அளவிலான பரிசோதனைகளை செய்கிறது என பல நாடுகள் இந்தியாவின் மீது குறை கூறிவருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா சமூகப்பரவலை அடைந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகிவிடும் ,
எனவே அது தற்போது உள்ள இரண்டாவது கட்டத்திலேயே அதை தடுத்து நிறுத்த வேண்டும், எனவே அதிக பரிசோதனை கருவிகள் இருந்தால் அது சாத்தியப்படும் என திட்டமிட்ட தமிழக அரசு, சுமார் 2 லட்சம் ராபிட் டெஸ்ட் கிட்டுகளை ஆர்டர் செய்தது ஆனால் கிட்டுகள் கிடைப்பதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது . ஆனால் இது பற்றி தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ராபிட் டெஸ்ட்டு கிட்டுகள் சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது , இதோ இன்று வந்துவிடும் நாளை வந்துவிடும் என கூறிவந்தனர் . ஆனால் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய டெஸ்ட் கிட்டுகளை அவசரம் கருதி சீனா அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாக தகவல்கள் வெளியானது . இதனிடையே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்துக்கு 2 லட்சம் ராபிட் டெஸ்ட் கிட்டுகளை அனுப்புமாறு நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார் .
அதேபோல் இதற்கு முன்னதாக மத்திய அரசு சார்பில் 10 லட்சம் டெஸ்ட் கிட்டுகள் வாங்க இருப்பதாகக் கூறப்பட்டது . அவர்கள் வாங்கும் கிட்டுகளில் இருந்து தான் தமிழகத்திற்கு பிரித்து தரப்படும் என்று பின்னர் கூறப்பட்டது . இந்த குழப்பங்களுக்கிடையில் தமிழகத்துக்கு ராபிட் கிட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இந்த கிட்டுகள் எவ்வளவு விரைவில் தமிழகத்துக்கு வருகிறதோ அவ்வளவு விரைவாக சோதனை நடத்தி வைரஸ் தொற்று உள்ள பலரையும் கண்டுபிடித்துவிட முடியும் ஆனாலும் இந்த கிட்டுகள் வாங்கும்போது முறையாக பரிசோதித்து வாங்க வேண்டும் என ஏற்கனவே சீனாவிடமிருந்து கிட்டுகளை வாங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன . ஏனெனில் சில சமயங்களில் கிட்டுகள் சரியான முடிவுகளை தெரிவிப்பது இல்லை என்றும் சீனாவின் கிட்டுகள் தரம் குறைந்ததாக உள்ளது ஐயோப்பிய நாட்டினர் குறைகூறி வருகின்றனர்.
ஆனாலும் தமிழகத்துக்கு எப்போது அந்த கிட்டுகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது . இதுகுறித்து டெல்லியில் பேட்டி கொடுத்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் தொற்று நோயியல் பிரிவு தலைவர் டாக்டர் ராமன் ஆர். கங்கோத்கர் சீனாவிடம் நாம் ஆர்டர் செய்த ராபிட் கிட்டுகள் வரும் 15ஆம் தேதி தான் இந்தியாவிற்கு வருகிறது . ஆனாலும் அது வரும்வரை நாம் கவலைப்படவோ , காத்திருக்கவோ தேவையில்லை நம்மிடம் போதுமான அளவுக்கு வைரஸ் கண்டறிய தேவையான கருவிகள் இருக்கிறது . இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 812 டெஸ்டுகள் செய்யப்பட்டுள்ளது . நம்மிடம் இருக்கும் கருவிகளை கொண்டே அடுத்த ஆறு வாரங்களுக்கு நாம் வைரஸ் பரிசோதனை செய்ய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.